Blog Archive

Monday, January 28, 2008

263,திருமங்கலம்54...திண்டுக்கல் 60

இந்தப் படம் பார்க்கும் போது பள்ளி நாட்களில் சனிக்கிழமை அனேகமாகக் கட்டு சாதம் எடுத்துக் கொண்டு கண்மாய்க்கரை போவோம். தண்ணீர் இந்தக் கண்மாயில்   இருந்து  நாங்கள் பார்த்ததில்லை.
ஆனால் கரையில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கும்.
அதில் தொங்கும் விழுதுகளில் ஆடினதுண்டு.
அம்மா கொடுக்கும் டிபன் தூக்கில் தயிர்சாதமும் வறுத்த மோர்மிளகாயும் தான் இருக்கும்.

இங்கயும் அதே கரியடுப்பும், விறகடுப்பும் தான்.
காலை வேளையில் பழையசாதம் மோர். நார்த்தங்காய், இல்லாவிட்டால் கத்திரிக்காய், கொத்தவரங்காய் வற்றல்:))

ஆஹா, அந்த வாசனையை என்ன சொல்வது. அம்மா கையில் பாகற்காயும், கருணைக்கிழங்கும் கூட பிரமாதமாக இருக்கும்.

நாம் இப்போது 1954ஆம் வருட ஜூன் மாத, ஒரு திங்கட்கிழமை மதியத்துக்கு இல்லையா போகணும்!!

அந்த 12 மணி வெய்யிலில் தம்பியிடமும் சொல்லாமல் அவனைத் தனியே விட்டு விட்டு(அவனுக்கு 5 வயது)
தனியாக வரப் பயமாக இருந்தாலும்,
அநியாயம் நிகழ்ந்தது போல ஒரே கோபம்,அழுகை.
கதவைத் திறந்த அம்மா, தம்பி எங்கே என்று கேட்டாலும் ,சாப்பிடலையா என்று விசாரித்தாலும் பதில் சொல்லாமல், பள்ளியில் நடந்ததை மட்டும் சொல்லி நான் இனிமேல் ஸ்கூலுக்குப் போக மாட்டேன் என்று தீர்மானம் சொல்லியாச்சு.
அம்மாவுக்கு ஒரு பக்கம் கோபம், ஒரு பக்கம் சிரிப்பு.
சரி அப்பா வரட்டும், விசாரிக்கலாம் என்று தட்டெடுத்து சாப்பாடையும் எடுத்து வைத்தார்.
சாப்பாடு உள்ளே போனதும் தம்பியைத் தனியே விட்டது
கவலை கொடுத்ததால் மீண்டும் பள்ளிக்கு ஓடி அவனைக் கைப்பிடித்து அழைத்து வந்தேன்.

அப்பா சாப்பிட்டதும் ப்ரச்சினையை அம்மா சொன்னார்.
உனக்கு அவன் உன்னொட படிப்பதால் என்ன கஷ்டம் என்று அப்பா கேட்டார்,.
அதெப்படி அக்காவும் தம்பியும் ஒரே வகுப்பில் இருக்க முடியும் என்பது என் வாதம்.
அப்பா தன் சைக்கிளில் எங்களை ஏற்றிக் கொண்டு
பள்ளி வந்து பெரிய டீச்சரைச் சந்தித்தார்.

அவர் எனக்காக வந்தார் என்று நான் நினைத்தாலும், உண்மை அது இல்லை.
அவர்களிடம் தம்பியின் வயதுக்கு ஏற்றது இரண்டாம் வகுப்பு என்றும் அதற்கு உண்டான பாடங்களைப் படித்தால் சரியாக இருக்கும் என்றும் சொன்னதும்,தலைமை ஆசிரிய்ரும் ஏற்றுக் கொண்டார்,. நானும் தம்பியும் எதிர் எதிர் வகுப்பில் அமர்ந்தோம்.
அப்படியிருந்தும் அவன் 15 வயதிலேயே பள்ளிப்படிப்பை முடித்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்து விட்டான்:))
திருமங்கலத்தில் அப்போது இரண்டு ஹைஸ்கூல்கள் இருந்தன. ஒன்று பெண்களுக்கான போர்ட் ஹைஸ்கூல்,
மற்றது பி.கே.என். நாடார் பள்ளி ஆண்பிள்ளைகளுக்காக.

ஒரே ஒரு நீளமான மெயின் ரோட்.
பஸ் நிலயத்திலாரம்பித்து ஆனந்தா திரை அரங்கத்தைக் கடந்து,மீனாட்சி பவன் ஹோட்டல்,தபாலாபீஸ்,அங்குவிலாஸ் வீடு,
சின்னக்கடைத்தெரு,சன்னதித் தெரு, மீனாட்சி அம்மன் கோவில் வழியாக,வாடிப்பட்டி,
உசிலம்பட்டி,கல்லுப்பட்டி,சோழவந்தான் என்று பஸ்கள் நம் வீட்டு வாயிலாகப் போகும்.

நாங்கள் இருந்த வீட்டுக்குப் பின்னால் ஒரு முனீஸ்வரர் கோவிலும் உண்டு.
அங்கே கேட்கும் உடுக்கைச் சத்தம் கேட்டு ஜுரம் வந்ததும் உண்டு.
பக்கத்து வீட்டில் நாலைந்து குடித்தனங்கள் இருந்தார்கள். ஒரு வீட்டில் கிளி வளர்த்ததால் அங்கேயெ இருந்து,அவர்களது இட்லிமெஸ்ஸுக்கு சட்டினி அரைத்துக் கொடுத்த அனுபவமூம் உண்டு:))
வாரமொருமுறையாவது அங்கிருந்து நான்கு அணாவுக்கு இருபது இட்லி நிறைந்த பாத்திரம் எடுத்து வந்ததும்,
ஒரு அரசு மருத்துவமனையில் அடிபட்டுக் கொள்ளும்போதெல்லாம் டின்க்சருக்கு அலறிக் கட்டுப் போட்டுக் கொண்ட நினைவும் உண்டு.

ஒரு தடவை திருமங்கலம் வழியாக ஒரு சுதந்திரக் கொடியேற்றத்துக்கு வந்த திருமதி இந்திரா காந்திக்கு மாலை போட எங்கள் பெரிய டீச்சர் அழைத்துப்போனதும்

முதல் முதலாக ஒரு வெள்ளைக் கதர்ப் புடவை கட்டி தலையில் முக்காடு போல அணிந்திருந்த ஒரு அபூர்வ பெண்ணைப் பார்த்ததும், சொல்ல வந்த ஜய்ஹிந்த் மறந்ததும் இப்போது சிரிப்பு வருகிறது.
அவர்களுடன் திரு.பட்டாபிராமன் என்பவரும் வந்திருந்தார்.

எங்கள் மூவரின் பல இனிய நாட்கள் இங்கேதான் கழிந்தன.
பெரிய தம்பி வீட்டுக்குள் நிறைய விளையாடுவான். சின்னத்தம்பிக்கு வெளியே வந்து விளையாட வயது பத்தாது.

ஆகக் கூடி ஊர் சுற்றியது நான் ஒருவளே:))















Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

20 comments:

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப அவசரமா ஓடற மாதிரி இருக்கே. ஒவ்வொரு இடத்திலேயும் கொஞ்சம் நிதானமா நின்னு அசை போட்டாத்தான் என்னவாம்?

கோபிநாத் said...

\\ஆகக் கூடி ஊர் சுற்றியது நான் ஒருவளே:))\\

;)))

வல்லிம்மா பெரிய ஆளுதான் போல...ம்ம்ம் இன்னும் பல சுவராஸ்சியமான விஷயங்கள் வரும் போல !! ;)

மெளலி (மதுரையம்பதி) said...

//ஒவ்வொரு இடத்திலேயும் கொஞ்சம் நிதானமா நின்னு அசை போட்டாத்தான் என்னவாம்?//

ரீப்பீட்டே :-)

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ்,
உண்மைதான். ஓடுகிறேனோ என்று எனக்கும் தோன்றியது.

ஓடமுடியாமல் கால்வலியும் இருக்கு(அசல்):))

கணீனி முன்னால் ஒரு ஸ்டூலும் போட்டுக்கறேன்,.காலை அதன் மேல் பிரதிஷ்டை பண்ணீட்டேன்னா,
ச்சும்மா அசை போட்டுடுவேன்.

இனிமே பாருங்க. ஏண்டா சாமினு சொல்லப் போறீங்க!!!
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபிநாத்.
அப்பா சாப்பாட்டுக்கு வரும்போது பக்கத்துவீட்டு வழியாக மாடியேறி, எங்க மாடியில் குதித்துக் கீழே வந்துவிடுவேன்.


அதனாலதான் என்னைப் பதினேழு வயசிலேயெ புகுந்த வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
அப்புறம் ஓடவில்லை:))
நன்றிப்பா/

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.
இனிமேல் நிதானமாக எழுதுகிறேன்.
படித்து விட்டிச் சொல்லுங்கள்.

பாச மலர் / Paasa Malar said...

என் அத்தை வீடு திருமங்கலத்தில் இருந்ததால் நீங்கள் சொல்கின்ற அத்தனை தெருக்களும் எனக்குப் பழக்கமானவை..

நல்ல துறுதுறு பெண்ணாகத்தான் இருந்திருக்கிறீர்கள்..

தி. ரா. ச.(T.R.C.) said...

சாப்பாடு உள்ளே போனதும் தம்பியைத் தனியே விட்டது
கவலை கொடுத்ததால் மீண்டும் பள்ளிக்கு ஓடி அவனைக் கைப்பிடித்து அழைத்து வந்தேன்.
அட நம்ப தங்கமணி கதை மாதிரியே இருக்கே. அவுங்களும் இப்படித்தான். தம்பியை கை பிடித்து கூட்டிக் கொண்டு 3 கி.மீ சின்னமோட்டூர் கிரமத்திலிருந்து நடந்து ரயில் பிடித்து வாணியம்பாடி சென்று ஸ்கூலுக்கு போய் இதே மாதிரி திரும்பி வீட்டுக்கு வருவது வழக்கம்.
நிதானமா நின்னு எழுதலாம் நாங்க மட்டும் இல்லை வீட்டிலே இருக்கறவங்களுக்கும்,பேரன் பேத்திக்கும் தெரிய வேண்டாமா/

Geetha Sambasivam said...

//எங்கள் மூவரின் பல இனிய நாட்கள் இங்கேதான் கழிந்தன.
பெரிய தம்பி வீட்டுக்குள் நிறைய விளையாடுவான். சின்னத்தம்பிக்கு வெளியே வந்து விளையாட வயது பததாது.
ஆகக் கூடி ஊர் சுற்றியது நான் ஒருவளே:))//

நாங்களும் மூன்று பேர்தான். அண்ணா பெரியவர், நான் நடுவில், கடைசியில் தம்பி, ஆனாலும் உங்க வீடு மாதிரித் தான் அண்ணாவும், தம்பியும் அப்பாவுக்குப் பயப்படுவார்கள். நான் பயப்பட மாட்டேன் என்றாலும் ஊர் சுற்ற முடியாது, சேர்த்து வச்சு இப்போச் சுத்தறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் பாசமலர்.
இன்னும் நிறைய இடம் விட்டுப் போச்சு.
ஆத்தங்கரை சொல்லலை.
பழைய சத்திரத்தைச் சொல்லலை:)
உங்க அத்தை எங்க இருந்தாங்க.
சொல்ல முடியுமா.

பப்ளிஷ் செய்யாம இருக்கேன்.

வல்லிசிம்ஹன் said...

நிஜமா இந்த மாதிரி அக்காக்கள் இருப்பதற்கு கொடுத்து வைக்கணும் தி.ரா.ச சார்.
:))
உண்மையாவே வாணியம்பாடி வெய்யில்ல ரயிலில் தம்பியைக் கூப்பிட்டுக் கொண்டு போய் படித்தார்களா!!!

பெரியசாதனை தான் அந்த வயதுக்கு. பாவம்.
நின்னு உட்கார்ந்து எழுதறேன் சார்:)

வல்லிசிம்ஹன் said...

கீதா, ஊர் சுத்தறதுன்னா என்ன தெரியுமா...
ரெண்டு தோழிகளை அழைத்துக் கொண்டு இந்தக் கோடிலேருந்து அந்தக் கோடிக்கு உலாத்தறது. யார் வீட்டில என்ன விளையாட்டுனு கேட்டு நமக்குப் பிடிச்ச வீட்டுக்குப் போக வேண்டியது.
அப்பா இருக்கும்போது நகர முடியாது:)

காட்டாறு said...

உங்க பதிவை வாசிக்கும் போது அம்மாவின் கைவண்ணச் சாப்பாடு அப்படியே நாக்கூற வைக்கிறது. :-) என்னடா.. கொசுவர்த்தி பதிவு எழுதினா.. இவ சாப்பாடை மட்டும் சொல்லுறாளேன்னு பாக்குறீங்களா அம்மா... சாப்பாடு வாசம் இங்கே வரை வந்ததே. :-)

துளசி கோபால் said...

திருமங்கலம் ஞாபகத்தில் அவ்வளா இல்லைப்பா......

கிணறு, ஊறுகாய் ஜாடி, காந்திமதியம்மா( காமா) ......

அரசாங்க ஆஸ்பத்திரி, டிங்ச்சர்:-)))))

நம்ம வட்டத்துக்குள்ளே வந்துருக்கீங்க:-)))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் காட்டாறு:)
எல்லா அம்மாவுக்கும் கைவண்ணம் உண்டே:)

சாப்பாடு இல்லாம லைஃப்ல என்னப்பா.
அதுக்குக்காகத் தானே பாடு எல்லாம். அதை அன்பாக கொடுக்கும் கரம் எதாக இருந்தாலும் அதைப்போற்ற வேண்டியதுதான்.

நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

பின்ன. துளசி. ஆஸ்பத்திரிக்குப் [போகாம இருந்துடுவோமோ:)
மறுபடியும் உங்க ம்அரத்தடி ப்அக்கங்களைப் போய்ப் பார்க்கணும்.

ஜஸ்ட் டு ரெஃப்ரெஷ்:))
திருமங்கலத்தில நீங்க குழந்தையா இருந்துட்டீங்க. உங்காக்காவுக்கு ஞாபகம் இருந்து இருக்கும்:((

பாச மலர் / Paasa Malar said...

ஆனந்தா தியேட்டருக்கு எதிர் ரோடு..உசிலம்பட்டி ரோடு..அங்கே மீனாட்சி கோவிலருகில் அத்தை வீடு.

குமரன் (Kumaran) said...

எனக்கெல்லாம் திருமங்கலம் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் கல்லூரிக்குப் போகும் வழியில் வரும் ஒரு ஊர். தாம்பரம் வந்தவுடனேயே சென்னை வந்துவிட்டது போன்ற உணர்வு தோன்றுமே அது போல கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வரும் போது திருமங்கலம் வந்தவுடனேயே மதுரை வந்துவிட்டது போன்ற உணர்வு தோன்றும். ஒவ்வொரு முறையும் அப்படியே உணர்ந்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் அந்த நடு வீதியில் தான் நான் பேருந்தில் பயணம் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். சின்னக்கடைவீதி, மீனாட்சி அம்மன் கோவில் என்றெல்லாம் சொன்னவுடன் மதுரையைச் சொல்கிறீர்களா திருமங்கலத்தைச் சொல்கிறீர்களா என்றொரு குழப்பம். :-)

மலரும் நினைவுகள் எல்லாம் நல்லா எழுதிக்கிட்டு இருக்கீங்க அம்மா.

வல்லிசிம்ஹன் said...

இப்போது இருக்கும் திருமங்கலம்
மிக மாறிவிட்டது.
அந்த பாதைவழியாகச் சென்னை பேருந்துகள் போவதே அதிசயமாக இருக்கிறது.
குமரன்,
மதுரையைச் சுத்தி இருக்கும் எல்லா ஊரிலும் ஒரு சின்னக் கடை, ஒரு பெரீய கடை எல்லாம் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்:)
நன்றிம்மா.

Unknown said...

I lived in Tirumangalam from 1973.
I studied in P.K.N Girls High school after that it became higher secondary school.
We lived near Tirumangalam Station, opposite to P.K.N Boys high school.

My grand mother's place (Father's) is Dindigul. We lived near the Railway station. The road name is Railway feeder road


I am really very happy to read all your old posts. Enjoying

Nalina