Blog Archive

Tuesday, January 02, 2007

ஒரு மீள் பதிவு--தேன்நிலவு போனகதை

தேன்நிலவு படம் வந்த போது நாங்கள் பள்ளிப்படிப்பை முடித்திருக்கவில்லை. காஷ்மீர் காட்சிகள், ஹவுஸ் போட்,வைஜயந்திமாலா,ஜெமினி கனேஷ்,தங்கவேலு என்று ஒரு அற்புதமான கதையுடன் பொழுதுபோக்கு சித்திரமாக இந்தப் படம் வந்த போது காஷ்மீரைக் கண்டு மயங்காதவர்கள் கிடையாது.



எல்லோருக்கும் கல்லூரியைப் பார்ப்போமா என்று தெரியாது. ஆனால் திருமணம் என்பது சீக்கிரம் நடக்கும் என்று மட்டும் தெரியும். அதனால் 11 ஆவது வகுப்பு தேர்வுகள் முடிந்து தோழிகளின் பட்டாளமே கூடி, அப்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த புதிய பறவை பார்த்து விட்டு வந்தோம். எல்லோருக்கும் சோகம். படமும் சுபமாகப் போகவில்லை. எங்களுக்கும் நாயக நாயகி(எங்கள் இஷ்டப்படி) சேராததால் திருப்தி இல்லை.

அப்போதைக்குஎங்களுக்கு ஆதரவு சொல்லி மகிழ்ச்சியைக் கொடுத்தது 2 வருடம் முன்னால் பார்த்த "ஓஹொ எந்தன் பேபி "காட்சிகள் தான். அந்தக் கணத்தில் முடிவு செய்தோம். திருமணம் முடிந்ததும் தேன் நிலவு போக வேண்டும். ஏதாவது மலை பிரதேசமாக இருக்க வேண்டும். குதிரை சவாரி, போட்டிங் எல்லாம் செய்து விட்டு , முடிந்தால் டூயட் பாடிப் பிறகு தான் சமையல் அறைக்குள் நுழைவது என்று.


பதினைந்து வயதில் அவ்வளவு தான் கற்பனை. திருமணத்தைப் பற்றி மேற்கொண்டும் ஒன்றும் தெரியாது அதனால் தான் எங்கள் தலை முறையில் அதுவும் தென் மாவட்டங்களில் பெற்றவர்கள் பேச்சுக்கு மறுபேச்சும் கிடையாது.

என் தோழிகளில் சிலர் திருமணம் முடிந்தே ஸ்கூலுக்கு வந்தார்கள். நிறையப் படிக்க நினைத்த நான், கல்லூரியில் ஒரு வருடத்துடன் திருமண வாழ்வில் புதுக்கோட்டை வந்தேன். பட்டம் முடித்த தோழி 4 வருடங்கள் கழித்து காஞ்சிபுரம் அருகெ ஒரு கடை முதலாளீயை மணம் முடித்தாள்.


இன்னொருவள் எங்கள் ஊருக்கும் மிஞ்சிய கிராமம் ஒன்றில் வயல்வெலி, மாடுகள் என்று குடி சென்றாள். 15 வருட இடைவெளிக்குப் பிறகுத் தங்க மாளிகையில் ஒரு சினேகிதியை வங்கி மேலாளராகப் பார்த்து பிரமித்தேன். இவர்கள் ,என்னையும் சேர்த்து ஒருவருக்கும் எங்கள் திட்டமும் நினைவு இல்லை. ,தேன்நிலவுபோக வேண்டும் என்ற எண்ணமும் பொய்யாய்ப் போய் விட்டது.



பிறகு எதற்கு இந்த தலைப்பு/? இது நாங்கள் இருவரும்(புருசனும் பொஞ்ஜாதியும்) திருமணம் முடிந்து36 வருடம் கழித்து, சுவிட்சர்லாந்துக்குப் போகும் எதிர்பாராத பயணம் அமைந்தது, எங்கள் மகன் அங்கே வேலையாகிப் போன போது. அப்போது அவன் வீட்டிலிருந்து எடுத்த புகைப்படம் இது.

20 வயதில் போயிருந்தால் கூட இத்தனை நிதானமாக அனுபவிக்க முடிந்திருக்காது. ஓட முடியாத, முழங்கால் கெஞ்சும் நேரம், நின்று தான் எல்லா காட்சிகளையும் கண்டோம். இப்போதும் கனவு காண நான் ரெடி. யோசித்து எந்த மண்டலத்துக்குப் போகலாம்னு பார்க்கிறேன்.நீங்க தான் சொல்லுங்களேன்.

13 comments:

ஷைலஜா said...

தேன் நிலவில் தானே காலையும் நீயே மாலையும்
நீயே பாட்டு வரும் வல்லிம்மா?
ஆமா எங்க ஏதோ போட்டோங்கறீங்க ஒண்ணும் காணோமே?
ஷைலஜா

இலவசக்கொத்தனார் said...

வல்லிம்மா, படம் தெரியவில்லையே...

VSK said...

//அப்போது அவன் வீட்டிலிருந்து எடுத்த புகைப்படம் இது.//

படம் காணலியே வல்லியம்மா?

மனசுலியே ஓடுதா? :)

ஓஹோ! உங்க கணக்குப்படி, "எல்லாம் எமக்குத் தெரியும்"னு கடைசிலே சொல்லிக்கலாமாக்கும்!
:))

நல்ல சுவையான பதிவு!

வல்லிசிம்ஹன் said...

ஷைலஜா, புத்தாண்டு நல்வரவு.
மறந்துட்டேன்மா.
தனியா படம் போடறேன்.

காலையும் நீயே அதில்தான்.
மலரே மலரே நீ யாரோ பாட்டும் அதில்தான்.:-)

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ் ஸார்,
படம் காட்ட (ரீல் விட) விட்டுப் போச்சு.:-)

வல்லிசிம்ஹன் said...

அதே அதே. எஸ் .கே.சார்.

'அதெல்லாம் முன்னாடியே தெரியும்பா' கணக்கு தான்.

படம் தனியா போடறேன்.
இது எப்படி என்றால் நெல்லைக்காரங்க போட்டா அது எங்க ஊரு, மதுரையும் அதே.
அப்புறம் இருக்கவே இருக்கு சென்னை.;-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குடும்பம் துவங்கும் போது போகும் தேனிலவு ஒரு சுவை என்றால்,
குழந்தை தவழும் போது போகும் தேனிலவும் ஒரு சுவை தான்!
என்ன வலிந்து தேனிலா ஆக்கிக் கொள்ளலாம்! :-)

அம்மா, அப்பா இங்கு வந்த போது நாங்கள் அவர்களைச் கொஞ்ச நாள் தேனிலவு தம்பதியராகத் தான் கருதினோம்! அவர்களுக்குப் பிடித்த பூங்கா, படகுச் சவாரி என்று தனியாகவே விட்டு விடுவோம், கையில் ஒரு செல்போனைக் கொடுத்து விட்டு! நாங்கள் இன்னொரு திசையில் சென்று விடுவோம்!

மதியம் மீண்டும் ஒரு இடத்தில் சந்தித்து, அவர்களிடம் பூங்காவின் அந்தப் பக்கம் பார்க்க வேண்டிய இடங்களை அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்வோம்!

ஒரே தமாஷ் தான் போங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சுவிட்சர்லாந்துக்குப் போகும் எதிர்பாராத பயணம் அமைந்தது//

வேர் இஸ் த பயணக் கட்டுரை வல்லியம்மா? :-)
தேனிலவுப் பயணம் என்றாலும் மற்ற பொதுவான பயணக் குறிப்புகளை எழுதலாமே! :-))

வல்லிசிம்ஹன் said...

ரவி,:-)

தொலைந்துபோகாமல் இருக்க செல்போனா?
எங்க கதை வேற. நான் ஒரு பென்சில் உட்கார்ந்து கொள்வேன்.
இவர் சுற்றி, எல்லா செடிகளையும் ஆராய்ச்சி செய்து வருவார்.
போகிற வர மக்கள் பொட்டு,பறக்கிற தலை,பெர்ர்ர்ர்ர்ர்ர்ரிய கைப்பை எல்லாம் பர்த்துக் கொஞ்சம் ரசித்து(?)விட்டுப் போவார்கள்.

வல்லிசிம்ஹன் said...

ரவி, 4 வருடம் முன்னாடிப் போனோம்பா.
எழுதலாம்.கண்டிப்பா எழுதறேன்.:-)
அது தேன்நிலவு இரண்டாவது என்று தலைப்பு போடலாமா.?

சேதுக்கரசி said...

நல்லவேளை இப்பவாவது போனீங்களே :)

வடுவூர் குமார் said...

எப்ப போனா என்னங்க??
என்ன வாய் தானாகவே தாளம் போடக்கூடிய வயசு மற்றும் அதோ தெரிகிறதா? என்று கேட்கக்கூடிய வயசுனா,கொஞ்சம் கஷ்டம் தான்.
ஹனிமூனை அனுபவிக்கனும்.:-))
போடுங்க சுவிச்சர்லாந்து படங்களை..
காத்திருக்கோம்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க குமார்.படங்கள் போட்டு விட்டேனே.

காலுக்குத் தான் வயசாச்சு. கண்ணு தேவலை. பார்த்து தெரிந்து கொள்கிறது:-)