Blog Archive

Tuesday, April 15, 2008

எனக்குக் காது சரியாகக் கேட்கிறது:)





இது நம் காது.
வலது காது.

ஒன்றும் இடாத வரையில் பிரச்சினையில்லை.
நாம் என்ன காதில் போடுபவர்களா?

காதில் போட்டுக்கறதே இல்லை என்பது தான் எல்லோருடைய கம்ப்ளைண்ட்.

வேணும்கறது மட்டும் காதில விழுமே!
காதை இந்தப் பக்கம் திருப்பேன் ஒண்ணு சொல்லணும்
இது வயசான பாட்டிகள் அடிக்கடி சொல்லும்
வார்த்தை.

ஏன் உனக்கு வயசாலயானு கேக்கக் கூடாது.

நான் இப்போ ஆறு வயது மோட்(mode)ல இருக்கிறேன்.

அப்போதெல்லாம் அம்மா நம் காதுகளைப் பார்த்துக் கொள்ளுவார்கள்.
எங்கள் மூன்று பேரையும்
உட்காரவைத்து , அது அநேகமாக இரவு வேளையாக இருக்கும்.
அப்பா இன்னும் வீட்டிற்கு வந்து இருக்க மாட்டார்,.

சாப்பாடு வேளை சரியாக 7 மணிக்கு.

அம்மா கையில் அந்த சிறு பாட்டிலை எடுத்ததும்
எங்களுக்கு உற்சாகம் பற்றிக்கொள்ளும்.
அம்மா இன்னிக்கு காதாம்மா?
என்று கேட்டுக்கொள்ளுவோம்.
ஆமாம் நேத்திக்கு நகம், இன்னிக்குக் காது என்று சின்னவன் ஒத்து ஊதுவான்.

எங்கள் ஆரோக்கியம், சுத்தம் இவைகளை அம்மா கவனிக்கும் அழகே தனி.

கையில் வைத்து இருந்த திரவம் ஹைட் ரஜன் பெராக்ஸைட் என்று நினைக்கிறேன்.

இன்னும் எனக்கு சரியாகத் தெரியாது.
நாகரீக நல்ல அம்மா எங்களுக்கெல்லாம்
வாய்த்தது எங்களுக்கு பாக்கியம்.

நாகரீகம் என்றால்அந்தவடிவத்துக்கு ஒன்பது கஜம்,சிறு புன்னகை
வாரிப் பின்னிய கூந்தல்.
சாதரண நூல் புடவை தான்.

ஓஹோ!!! சரி.
.காதுக்கு வருவோம்.
எங்களுக்கு ஆவல் தூண்டும் விதமாக
ஒரு சொட்டு திரவத்தை தரையில் அழுக்கு
இருக்கும் இடத்தில் விடுவார்கள். அங்கு அப்படிய்யெ அழுக்கு நுரைத்து வரும்.
ஏம்மா இப்போதானே சுத்தம் செய்தே நீ, என்று நாங்கள் கேட்டால்,
கண்ணுக்குத் தெரியாமல் எத்தனையோ இருக்கும்மா
என்று சொல்லி,
ஒவ்வொருவருக்கும் காதைச் சுத்தம்
செய்து முடிப்பதற்கும் அப்பா வருவதற்கும் சரியாக இருக்கும்.
இதில் எங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயம்
அம்மா மடியில் படுத்துக் கொண்டு

சுகமாகக் காது சுத்தம் செய்து கொள்வது.



அதெல்லாம் போய் இப்போ புதிதாக

அதே காதுக்கு வலி வந்தால் ,

என்ன செய்வது?முதலில் காட்டன் பட்ஸ்.
அது வலியை அதிகப் படுத்தும்.

எப்படியென்றால் காது குடைவது சுகம்.
வலியோ அதிகம்.

அடுத்தது தேங்காய் எண்ணை வைத்தியம்
1,எண்ணையைக் காய்ச்சி, அதில் உள்ளிப்பூண்டைப்

பொரித்து,
மிதமான சூட்டில் காதில் விட்டுக் கொள்வது.
பூண்டு பிடிக்காதவர்கள்
கற்பூர வில்லையைப் போட்டு
மணக்க மணக்கக் காதில் விட்டுக் கொள்ளலாம்.

அனேகமாக இந்த வாசனையெல்லாம்

பசியைக் கிளப்பி விடும்.
அதனாலேயெ காது வலி போகுமோ?
போகாது.
அது காத்துக் கொண்டு இருக்கும்.


இவள் ஏதாவது வாயிலெ போட்டு மெல்லுவாள்.
அப்போ நமக்கு வேலை என்று.
அதே போல வாயிலே சாப்பாடு போட்டதும் காது
வலிக்கும் ,
காது முறைக்கும்.
நான் இங்கே கஷ்டப்படறேன், நீ நாக்குதொண்டையைக் கவனிக்கிறயே என்று வலி கூட்டும்.

ஆகக்கூடி '' வெல் கனெக்டட்னு " சொல்லணுமுன்னா
இந்தக் காது மூக்குத் தொண்டை தான்.
உங்களுக்குத் தெரிஞ்ச விஷயம் தான்.

ஜலதோஷம் வந்தால் கூடவே காது சிவக்கும்.தொண்டை

வலிக்கும்.
என்ன ஒத்துமை பாத்திங்களா?
என்னை இப்படி எழுத வைத்ததே இந்தக் காதுவலி
தாங்க.

புலம்பறதுக்கும் , அதைக் கேக்கறதுக்கும் ஆளெ,
இந்தப் பதிவாப் போனதாலே,
இங்கேயே எழுதறேன்.
போன
வியாழன் இரவுத் தூக்கத்தின் நடுவில்

எங்கேயோ டிரில்லிங் சத்தம் கேக்கிறது.
ஓக்கே, ரோடில ஏதோ ரிப்பேர் என்றூ திரும்பிப்
படுத்தால், அந்த வினோத சத்தம் காதுக்குள்

வலியோடு கூட்டு வைத்துகொண்டு கச்சேரி ஆரம்பித்துவிட்டது.

தேவுடா, என்று மருந்துப் பெட்டியைப் பார்த்தால்
க்ரோசின் தான் இருந்தது.

சாமி காப்பாத்துனு அதை முழுங்கித் தூக்கம் வராமல் முழித்து, டி.வி பார்த்து, காலையில்
சோக முகத்தோடு, ஈ.என்.டி டாக்டர் கிட்டே போனொம். அன்று நவராத்திரி வெள்ளி.

டாக்டர் அம்மா என்ன காட்டானாலே காதைக் குடைந்தீர்களா எண்று நக்கலாகக் கேட்டுவிட்டு


முகத்தை அப்படி இப்படித் திருப்பி,
வலது காதில், கம்மலை ஆராய்ந்து,

பல்லைப் பார்த்து, மூக்கைப் பாத்து
மறுபடி ஆரம்பித்த இடத்துக்கு
வந்தார்.
அவர்கையில் ிருந்த சின்ன கூரான ஊசியைப் பார்த்ததும்
கொஞ்சம் நடுக்கமாக இருந்தாலும்

மெலிதாக அவர் காதுக்குள் பரிசோதனை செய்து "ஓ
சம் டெப்ரீஸ் ஆர் தெர்"
எண்று அவைகளை எடுக்க ஆரம்பித்தார்.

எனக்கொ நாம் மூளையைக் கசக்கும் வேலையை செய்யவில்லையே
எப்படி பொடிகள் வரும் 'என்ற சிந்தனையில்
ஆழ்ந்தேன். '

'லுக் அட் திஸ் லுக் அட் திஸ்'
என்று சில பொடிகளைக் காண்பித்தார்.
நானும் பூம் பூம் மாடு மாதிரி
தலையை ஆட்ட முற்பட்டுக் காது வலித்ததால்
நிறுத்திக் கொண்டேன்.

சிங்கம் வேற சும்மா இல்லாமல்
ரொம்ப நேரம் சத்தமாப் பாட்டுக் கேக்கறாங்கனு சொன்னார் அவர்களிடம்.

இவருக்குப் பாட்டு என்றால்
டி.விக்கு க்கூட கேக்காமல் கேட்கணும்.
எனக்கோ பாட்டோடு ஒன்றும் அளவிற்கு
சத்தம் வேண்டும்.
எப்படியோ அதற்கும் வலிக்கும் சம்பந்தம் இல்லை
என்று டாக்டர் சொல்ல , இரண்டு பக்க மருந்துகளை எழுதிக் கொடுத்தார்.
''அம்மாவுக்கு வயசு 58ஆ. ''(மூன்று வருடம் முன்னால்)
ஓ?? !!!!!

என்று மெதுவாக ,ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்பா
வயசானவர்களுக்கு சொல்லுவது போல

''இதை(மாத்திரை) உடனெ எடுத்துக்கணும்.

காதுக்குள்ள பஞ்சு போடக்கூடாது.

இதை சாப்பிட்ட பிறகு எடுத்துக்கணும். (இன்னோரு மாத்திரை)

''நாட் பிஃஃபோர் ஃபுட்'' என்றெல்லாம் திருப்பி திருப்பி சொல்லி முடித்து வெளில அனுப்பியதும் ,

அடுத்த வந்த வாலிபரிடம் அவர் சொன்ன வார்த்தை
தான் டாப்.

''பாவம் வயசானாலே புரிஞ்சுக்கிறது

கஷ்டமாகி விடுகிறது.

வி ஹேவ் டு பி பேஷண்ட்,"

என்றதும் எங்கே போயி முட்டிக்க என்று தெரியாமல் மருந்துக் கடைக்கு வந்தோம்.

நான்கு நாள் படாத அவஸ்தை பட்டாச்சு.

கொலு பார்க்கவந்த மாமி சொன்னது
இன்னும் சிரிப்பு.
உங்க காதுக்கு இன்னும் பெரிய தோடு போடலாம் போல இருக்கே என்றதுதான்.
நானும் கீதா மாதிரி ஹி ஹி சொல்லி, ஒண்ணுமில்லை
காது வீங்கி இருக்கு என்றேன்.

பதிவு ஆரம்பத்தில் ெழுதிய யோசனைகள் எல்லாம
ஊரார் எனக்குக் கொடுத்த அறிவுரைகள்.


இந்தப் பதிவைப் படித்து உங்களுக்குத் தலைவலி வந்தால்
சொல்லுங்கள்.
தனிதனியாகப் பிரித்து வைத்தியம் செய்து விடலாம்.

11 comments:

துளசி கோபால் said...

இந்தக் காதுதான் இப்படிப் பாடாய்ப்படுத்துதா?
அட தேவுடா......

ஆமாம், கோயிலிலே ஸ்வாமிக்கு அலங்காரமாய் காதுக்கு ஒரு கவசம் போடுவாங்களே
தகதகன்னு முழுக்காதையும் மூடுறாப்போல. அப்படி ஒண்ணு வாங்கிக்கலாமா?
காதுக்குக் கதவும் ஆச்சு. உள்ளெ கட்டன் பட், பறவை இறகு, ஹேர்ப்பின் இத்தியாதிகளை
நுழையவிடாமத் தடுக்குற தடுப்பும் ஆச்சு. என்ன சொல்றீங்க?

G.Ragavan said...

என்னது காட்டன் பட் காதுக்குள்ள போடக்கூடாதா? அப்புறம் எப்படி அழுக்கெடுக்குறது? ஹேர்ப்பின் தான் பெஸ்ட் :-)

வல்லிசிம்ஹன் said...

ராகவன் அழுக்கு தானா வெளில வந்துடுமாம்.
இப்போ டெண்டிஸ்ட் கிட்ட போயி பல்லைக் காட்டுறதில்லியா ஆறு மாதத்துக்கு ஒரு முறை? அது மாதிரி கண்,காது எல்லாம் அவங்க கையாண்ட கொடுத்துட்டு
வரணுமாம்.

வல்லிசிம்ஹன் said...

ராகவன் அழுக்கு தானா வெளில வந்துடுமாம்.
இப்போ டெண்டிஸ்ட் கிட்ட போயி பல்லைக் காட்டுறதில்லியா ஆறு மாதத்துக்கு ஒரு முறை? அது மாதிரி கண்,காது எல்லாம் அவங்க கையாண்ட கொடுத்துட்டு
வரணுமாம்.

வல்லிசிம்ஹன் said...

துளசி நான் முன்ன போட்ட பதில் பின்னூட்டம் வரலை.
தங்கத்தில வைரம் பதிச்சு
ஒரு 6 ஜோடி வாஙகலாமான்னு
கேட்டு இருந்தேன்.
கம்ப்யுட்டர் கீபோர்ட் காதிலேயே போட்டுக்கலை.

வல்லிசிம்ஹன் said...

காதில பூ சுத்தலை.
பரிசோதனைப் பதிவும் பின்னூட்டமும்தான் இது.

Geetha Sambasivam said...

ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

இலவசக்கொத்தனார் said...

இடது காதா? படத்தைப் பார்த்தா வலது காது மாதிரின்னா இருக்கு.

ஹைட்ரஜன் பெராக்ஸைட்தான் அழுக்குப் போகப் போடச் சொல்லறாங்க.

பஞ்சு காதுக்குள்ள போகவே போகக்கூடாதாம்.

வல்லிசிம்ஹன் said...

பஞ்சும் போகக்கூடாது.
அழுக்கும் வெளில வரணும்.
கொஞ்சம் ஆடுபுலி புல்லுக்கட்டு மாதிரி இருக்கு.

இது இந்த வலி வந்து போயி எட்டு மாசம் ஆச்சு.
இப்ப நினைத்தாலும் பயமா இருக்கு.

நானானி said...

காதுக்குள் இவ்ளோ..விஷயமா?
நான் கேட்டதேயில்லையே?
காதுக்குள்ளிருந்து எழும் ஓசையை
அமெரிக்காவின் அமைதியான இரவுகளில் கேட்டேன். அதுதான் உள்
மனதின் ஓசையோ?
வல்லி! என்னோட சினிமா புதிர்களுக்கான விடைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அலை ஓசையா நானானி.
ஸ்மைலி போட்டுக்கோங்கோ.

இப்பவும் கதைல குறுகுறுத்ததால்தான் இந்தப் பதிவைப் போட்டே.
உங்கள் புதிரை நான் பார்க்கவில்லை. காலைக்குள் பார்த்துவிடுகிறேன்.