Blog Archive

Sunday, October 01, 2006

விடுதலை-தேன்கூடு போட்டிக்கு

விடிவை  நோக்கி















விடிவை நோக்கி ################# சிறு நெடுங்கதை
******************************************************

வெளிச்சத்துக்கு வந்ததும் வினிதாவின் கண்கள்
மூடித்திறந்தன.
நெஞ்சு படபடப்பு அடங்கி சுவாசம் சீரானது.

கதவைச் சத்தமில்லாமல் மூடி வராண்டாவிலிருந்த
கூடை நாற்காலியில் அமர்ந்தாள்.

காய்கறிக்காரியின் குரல், பேப்பர் விற்பவன்,
பக்கத்து வீட்டுப் பாப்பாவின் செல்ல அழுகை, அதை அமர்த்தும் அதன் அம்மாவின் குரல்
எல்லாமெ தான் இன்னும் உலகத்தில் வாழ்கிறொம் என்ற தெம்பைக் கொடுத்தன.

உள்ளிருந்து வந்துவிடுமோ சத்தம் என்று ஒரு காது
மட்டும் தயார் நிலையில் இருந்தது.

ஏன் தனக்கு மட்டும் இந்தக் கொடுமை.

தான் எந்த வழியில் தப்பு செய்தோம்.
பாதை ஏன் திருமணமான மூன்று வருடங்களில்
மாறியது?
யார் காரணமா?
வேலையில் தொந்தரவா,
கெட்ட சகவாசமா.?
தன் மேல் சலிப்பு வந்துவிட்டதா?

ஒரு கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை.
அழகான ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமான
குடும்பத்தில் ஒரே ஒரு பதவி உயர்வு

இத்தனை போராட்டங்களைக் கொடுக்குமா என்று அந்த
மனசு யோசித்தது.

திறமையான கணவன், அவனுடைய
தனியார் அலுவலகத்தில் நல்ல உழைப்பாளி என்ற
பெயர் வாங்கினவன்.

சிவசங்கரி அம்மா கதைகளில் வரும்
ஹீரோ போல மென்மையானவன்.
திருமணமோ காதல் திருமணம்.

பிறர் பார்த்துப் பொறாமைப் படும்
சிறிய குடித்தனம்.
ஒரு ஜாவா பைக்கில் குடும்பமே
கோவை மாநகரை வலம் வந்து விடுவார்கள்.

ஒரு நாள் ராமர் கோவில்,ஒரு நாள் மருத மலை
ஒரு நாள் ஆர்.எஸ், புரம் பானிப் பூரி கடை.

100' ரோடில் கடைகளில், ஒன்று விடாமல் ஏறி இறங்கி
மாமியார், மாமனார் உட்பட எல்லோருக்கும் கூல்
காட்டன் ரெடிமேட் உடைகள்.

பெண்ணுடைய முதல் பிறந்த நாளுக்கு பட்டுப் பாவாடை.

ஒன்றுமே குறைவில்லை.

கணவனுடைய அலுவலகத்தில்
அவனுக்கு ஜூனியருக்குப் பதவி
ஏற்றம், அதுவும் எப்படி இவனுக்கு
மேற்பார்வையாளராக. வரும் வரை.

அவனால் அதைஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தான் வஞ்சிக்கப் பட்டதாக
எண்ணினான்.
வினிதாவுக்கும் வருத்தம் தான்.

கணவனுடைய மன அழுத்தம் அவளையும் தாக்கியது.
எத்தனையோ ஆறுதல் சொன்னாள்.
மரமேறிய மந்திக்குத் தேன்கூடு கிடைத்தது போல
ஒரு தோழனும் வந்தான்.
கட்டுப்பாடோ, அமைதியோ இல்லாத
குடும்பம் அவனது.
தோழன் தன் வீட்டிற்கு இவர்களை
அழைக்க இவர்களும் ஒரு மாற்றுக்காக அங்கே போக,
ஆரம்பித்தது குடிப் பழக்கம்.
ஒரு வார இறுதி அங்கெ.
மறு வாரம் இவர்கள் வீட்டில்.வெறும் பீர்
என்று ஆரம்பித்து,
ஹார்ட் டிரின்க்ஸ் என முன்னேறியது.
இதற்காகவே புதிய நண்பர்கள் சேர
சம்பாதிக்கும் நல்ல சம்பளம்
சரசரவெனக் குறைய ஆரம்பித்தது.

முதலில் கணவன் சந்தோஷத்தைத் தானும் மகிழ்ச்சியாக
இருந்த வினிதா,
கொஞ்ச நாளுக்குப் பிறகு,
வரும் நண்பர்களுக்குத்
தோசையும் புலவும்
செய்து கொடுத்து சலித்தாள்.

வீட்டில் அமைதி குறைந்தது.
கணவன் வெளியில் கடன் வாங்குவதும் தெரிந்தது.
பிளே ஸ்கூல் செல்லும் குழந்தைகள் பள்ளி முடிந்து
வீட்டுக்கு வரவே பயந்தனர்,.
'ஏம்மா, அப்பாவுக்கு ஆஃபீசில் இவ்வளவு லீவு கொடுக்கிறார்கள்?'
என்று கேட்கும் குழந்தைகளைக் கவனிக்க
முடியாத அளவு
பழக்கம் வளர்ந்து விட்டது.
எவ்வளவு பெரிய ஜெண்டில்மேன்தன் கணவன் என்ற
மாயையிலிருந்து விலகி அவனைப் பார்த்து பயப்பட ஆர்மபித்தாள்.

உலகத்தில் எல்லோரும் நார்மலாக இருக்கும்போது இதென்ன இப்படி ஒரு அரக்கன் நம் கணவரைப்
பிடித்துவிட்டானே என்று வழி தெரியாமல் மருகத் தொடங்கினாள்.

அவனுடன் உறவாடிக் கெடுப்பவர்களை விலக்க நினைத்து
தோல்வியாயிற்று.
அன்றும் அப்படி ஒரு நிதானத்தில் இல்லாத தருணத்தில் வெளியே போக முயற்சித்தவனைத்

தடுத்துத் தனக்குத் தெரிந்த சாம தான பேத தண்ட முறைகளை உபயோகித்து
அவனைத் தூங்க வைத்து வெளியெ வரும்போதுதான் நாம் அவளைப் பார்க்கிறோம்.

அந்த நிலைமையில். வேலைகூடப் பறி
போகுமோ என்ற கடைசித்தரு ணத்தில்
'ஒரு மனிதனின் கதை''
படித்த ஒரு தோழி அவளுக்கு வழி இருப்பதைச் சொன்னாள்.

தீர்மானத்துக்கு வந்த வினிதா, கணவனின் அலுவலக

மேலாளரைப் பார்த்து தன்
எண்ணத்தைச் சொன்னாள்.
அவரோ ஒரு கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடு வழியில் வந்த அதிகாரி.சற்றே வயதானவர்.
அவருக்கு
குடிப்பழக்கம் ஒரு வியாதியாக இருக்கக் கூடும் என்று
நம்ப முடியவில்லை.
எப்பவுமே அவருக்குச் சின்ன வயதிலேயெ
இவ்வளவு பெயரும் புகழும் கிடைத்த

வினிதாவின் கணவனிடம் அவ்வளவு மதிப்புக்
கிடையாது. மதிப்பைத் தக்கவைக்க முடியாத
சஞ்சல புத்திக்காரன் என்று நினைப்பு.

எவ்வளவு முட்டுக்கட்டைப் போடமுடியுமோ அத்தனையும்
போட்டுக் கடைசியில் சம்மதித்தார்.
சிகித்சை முடிந்து பிறகு வேலையில் சேரலாமென்ற
விதிகளோடு வினிதா வீடு திரும்பினாள்.
அடுத்த கட்டமாக வட மாநிலத்தில் வேலையில்
இருந்த தன் மாமனார், மாமியாருக்குக் கடிதம்
எழுதி தங்கள் இரண்டு குழந்தைகளையும்
அவர்கள் கவனத்தில் விட வேண்டிய
அவசியத்தை எழுத அவர்களும்
நிலைமையின் அவசியத்தைப் புரிந்து வந்து சேர்ந்தனர்.

அதற்குள் இரு முறை அதிகமாகக் குடித்ததில்
இருதய வலி வந்து அவஸ்தைப்பட்டக்

கணவனை அழைத்துக் கொண்டு ,வினிதா சென்னை வந்து
சேர்ந்தாள்,.

போதை மாற்று சிகிச்சை செய்யும்
அந்தப் பிரபல மருத்துவ மனையில்
தனது அன்புக் கணவனைத்
திரும்பவும்

சாதாரண மனிதனாகப் பார்த்தவளின்
அழுகை அடங்க வெகு நேரமாகியது.

அங்கு அவளுடைய உள் மனக் காயங்கள்

ஆறு வதற்கும் மனநல மருத்துவர்களிடம்

பயிற்சி

பெற்றவள் முகத்தில், இப்போது சிரிப்பைப் பார்க்க முடிகிறது .
இப்போது இன்னோரு பெண் குழந்தையும் அவர்கள்
வாழ்வில் வளம் பெருக்க வந்தது.

ஒருவர் மனநலத்தோடு ,சுய புத்தியோடு இருந்தாலே

அதுதான் உண்மையான விடுதலை என்று நான்
நினைக்கிறேன்.

அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.
இப்பவும் வினிதாவைப் பார்க்க நேரும்போது

நான் எதாவது சொல்லி அவளைப் புகழ முற்பட்டால் அவளுக்குப் பிடிக்காது.
'என்னக்கா, என் புருஷன் எனக்கு வேணும்னு நினைச்சேன். கடவுளும் அருளினார்'' என்று
சுலபமாக முடித்து விடுவாள்,
இந்த நவீன சாவித்திரி.

7 comments:

சிறில் அலெக்ஸ் said...

நல்ல கதை வழக்கமான சில பகுதிகள் இருந்தாலும் தலைப்புக்கு ஏற்ப எழுதியிருக்கீங்க.

வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

நல்ல சிம்பிள் கதை.

ரொம்ப திருப்பங்கள், குறுக்குப்பாதைகள் இல்லாம' சீதா சாதா.'

நல்லா இருக்கு வல்லி.

வெற்றி பெற வாழ்த்துகள்.


முர்பட்டால் = முற்பட்டால்

( இங்கே வல்லின ற வரணும்)

வல்லிசிம்ஹன் said...

வாங்க சிறில்.
நன்றி.
நகாசு வேலை செய்ய ஆசைதான்.

எழுதி முடிக்கத் தீவிரம் காட்டியதில்

பார்த்த சம்பவம் அப்படியே வந்து விட்டது.

வல்லிசிம்ஹன் said...

தலைப்புக்காக எழுதப் பட்ட சம்பவம் துளசி.
நிஜமான நிகழ்ந்த கதை என்பதால் நோ திடீர் திருப்பம்.

ர் போட்டது தப்புதான் டீச்சர்.
இனிமே பார்த்துப் போடுகிறேன்:-))
நீங்க எல்லாம் பின்னூட்டம் போடறதே எனக்கு வெற்றிதான்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

உண்மைக் கதை என்று அறியும் சமயம் கதையின் கனம் அதிகமாகிறது.

வல்லிசிம்ஹன் said...

செந்தில் குமரன் வாங்க.
அமாம் உண்மை சம்பவம்தான். அதனால் நாங்கள் அனைவருமே வருத்தப் பட்டோம்.
அந்தப் பெண்ணின் போராட்டம் என்னை இன்னும் வியக்க வைக்கிறது.
சுய புட்தி இல்லாமல் இப்படி ஆகிவிட்டாரே என்று அவள் அழும் நேரம் கொடுமையானது.

வல்லிசிம்ஹன் said...

சுய புத்தி என்று படிக்கவும் குமரன்.