Blog Archive

Wednesday, September 27, 2006

வேறு யாரும் துணை இல்லாத போது..

டிசம்பர் மாதம் மிகவும் பிடித்தமாதம் எனக்கு.
படிக்கும் காலத்தில் பரீட்சை முடியும் . 15 நாட்கள் லீவு கிடைக்கும்.
படித்தபோது பெற்றோர் இருந்த
திண்டுக்கல் நல்ல சீதொஷ்ணத்தோடு இருக்கும் சில மாதங்களில் டிசம்பரும் ஒன்று.

படிப்பு, திருமணம் குழந்தைகள் பிறந்து அவைகளும் பள்ளி செல்ல ஆரம்பித்ததும் அவர்கள் லீவு நாட்களும்
இனிமையாகக் கழியும்.

அதனால் ஒரு டிசம்பர் சோதனையாக மாறும் என்று நான் நினைக்கவே இல்லை.
அப்போது நாங்கள் திருச்சியில் இருந்தோம்.

சிறு குழந்தைகள். ஒரு நாள் சாயந்திரம்
இவர் வீட்டுக்கு வரும் போதே கடும் காய்ச்சலுடன் வந்தார்.
எப்போதும் எதற்கும் அலட்டிக் கொள்ளாத ஆசாமி
சுருண்டு படுப்பதைப் பார்த்து
பயமாகி விட்டது.
சரி ஜுரத்துக்கு மருந்து கொடுப்போம் என்று ரசம் சாதமும்
பிறகு பாராசிடமால் ஒன்றும் கொடுத்து
தூங்கலாம் என்று பார்த்தால் இரவு 10.30 மணி வாக்கில் உடல் நெருப்பாகக் கொதிக்க சப்தமாக முனக ஆரம்பித்து விட்டார்.
குழந்தைகள் அரண்டு விட்டன.
அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் ஏதொ அலுவலாக வெளீயூர் போயிருந்தார்கள். நாங்கள் இருந்த மன்னார்புரம்
அப்போது அவ்வளவாக ஜனநடமாட்டம்
இல்லாத இடம்.

வெளியே டெர்ரஸில் வந்து மலைக்கோட்டைப் பிள்ளையாரை (விளக்குகள் தெரியும்) வேண்டிக்கொண்டு,

கீழே போய், ரோடு தாண்டினால் இருக்கும் ஒரு காலேஜ்
ஹாஸ்டலில் மாணவர்களிடம் டாக்டர் கிடைப்பாரா என்று தெரிந்து கொண்டு
அவரை அங்கிருந்த போனிலேயே
எங்க வீட்டுக்கு வரச்சொல்லி
வேண்டிக்கொண்டேன்.
அப்போதுதான் அங்கிருந்த காலண்டரில்
நம்ம சமயபுரம் அம்மா இருந்தது தெரிய வந்தது.

சாமி ஞாபகம் வருவது நமக்கு எமர்ஜென்சி டையத்தில் தானே. உடனே அவளைக் கைகூப்பிக் காப்பாத்து
என்று சொல்லி விட்டு,
வீட்டுக்குத் திரும்பினேன்.
டாக்டர் எங்கேயோ இருப்பவர். பெயர் கூடத் தெரியாது.
முப்பத்து இரண்டு வருடங்கள் முன்னால்
இப்போது இருக்கும் தெளிவோ
துணிவோ கிடையாது. :)))
ஆனால் டாக்டர் சொன்னதென்னவோ பெரிய வார்த்தை.
இவர் மேல் அம்மா வந்து இருக்கிறாள் என்று.
சிக்கன்பாக்ஸ்.

அறியாமை ,பயம் நிறைய என்னை ஆட்கொள்ள
அடுத்த வேண்டுதல் சமயபுரத்து மாரியிடம்தான்.

நீ காப்பாத்து என்பதைத் தவிர அந்த இரவு வேறு எந்த வார்த்தைகளும் என்னிடமிருந்து.

டெலிபோன் எல்லாம் வீட்டில் அப்போது கிடையாது.
காலை நெருங்கும்போது கொஞ்சம் தெளிவு வந்தது.

எங்கள் வீட்டு வேலைக்கார அம்மா பேரு மேரி.
அவங்க வந்ததும் அவரிடம் நானும் குழந்தைகளும்
அடைக்கலம்.

அவர்தான் எங்களைத் தேற்றினார்.
அய்யா வயசில (34) பெரியவரு இல்லை. வந்தா எல் லாம் கொஞ்சம் பயமாக இருக்கும்.
20 நாளில் எல்லாம் சரியாகி விடும்
என்று எனக்கு இந்த சமயம் செய்ய வேண்டிய பத்திய சாப்பாடு, வேப்பிலை பற்றி எல்லாம் சொல்லிக் கொடுத்தார்.
மறக்காமல் கடைக்குப் போய் (அப்போது) இரண்டு ரூபாய் விலையில் சமயபுரம் அம்மாவின் படமும் வாங்கி வந்தார்கள்.

என் பெற்றொருக்கும் இவர் பெற்றொருக்கும் கடிதங்கள் எழுதி போஸ்ட் செய்யச் சொன்னேன்.
பதில் 2 நாள் கழித்து வந்தது.
இருவராலும் வரமுடியாத நிலை.

அப்போது எனக்கு இன்னும் தைரியம் வந்தது.
கூடவே இந்த மூன்று குழந்தைகளுக்கும்
பரவி விட்டது.
அப்புறம் கேப்பானேன்.

எல்லோருக்கும் தயிர் சாதம், இளநிர்,
பச்சை வெங்காயம், பூண்டு போட கீரை,
தக்காளி சூப்.
இதெதான் காலையும் மாலையும்.

இரு வாரம் சென்றதும் மேரியம்மா
பருத்திக்கொட்டை கொண்டு வந்தார்.
எதற்கு என்றபோது அவைகளை ஊற வைத்து
பால் எடுத்து இவர்கள் குடிக்க வேண்டும் என்று

எடுத்து வைத்தார்.
இதுவரை பருத்தியும் பசுவும் தெரியும்
மனிதர்கள் சாப்பிடுவார்கள் என்று தெரியாது.
வேப்பிலை மஞ்சள் அரைத்துக் கொடுப்பது,
எப்போதும் துணையாகப் படுப்பது
என்று
சமயசஞ்சீவியாக வந்தது, காப்பாற்றியது அந்த அம்மாதான் என்று உணர்கிறேன்.

இது எங்கள் எல்லோருக்கும் சேர்ந்து
அனுபவமானதால் இன்னும் குடும்பத்தில் நெருக்கம்
சேர்ந்தது.
ஏனெனில் அப்பா என்பவரைப் பார்ப்பதே
குழந்தைகளுக்கு அபூர்வம்.
மூன்று வாரங்கள் அப்பா வீட்டில் ிருந்து
அவர்களோடு கதை பேசினது,
எல்லாம் நல்ல விதமாக முடிந்தது.
நாங்களும் சமயபுரம் 3 வாரங்கள் போய் வந்தோம்.
மேரியம்மாவுக்கு நான் என்ன கொடுத்து
கடன் தீர்க்க முடியும்?
அவருடைய இஷ்ட தெய்வமான வேளாங்கண்ணி அம்மாவுக்கு மெழுகு வர்த்தி ஏத்த சொன்னார்கள் செய்து விட்டேன்.
கால்த்தில் செய்த உதவி.
அவர்கள் பேரன் பேத்தி கல்யாணங்கள்
முடிந்தததாக் அறிந்தேன்.
நான் தினமும் செய்யும் வழிபாட்டில் மேரிக்கு எப்போதும் இடம் உண்டு.
திக்கற்றவற்குத் தெய்வமே துணை.
தெய்வம் மனித ரூபத்தில்
வந்து விட்டது.

14 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சில பதிவுகள், நம் வீட்டிலும் அது போலவே நடந்திருப்பதை, ஒப்பிட்டுப் பார்த்து, மனதில் நெகிழ்வை ஏற்படுத்தி விடும்.
உங்கள் பதிவும் அதில் ஒன்று, வள்ளி!
துளசி டீச்சரின் அண்மைப் பதிவும் (தையல் மிஷின் + குழந்தை), இதே போலத் தான்!

//முப்பத்து இரண்டு வருடங்கள் முன்னால்
இப்போது இருக்கும் தெளிவோ
துணிவோ கிடையாது//
எங்களுக்கும் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து இப்படி தான் தோணுமோ? :-)

அது என்னமோ தெரியவில்லை, பல சமயங்களில் அன்னையானவள் மேரி என்று பெயர் சூடி வருகிறாள். எங்கள் குழந்தை ஷ்ரவண் பிறந்த போதும் இதே தான் நடந்தது. அமெரிக்காவில் தன்னுடைய shift-உம் தாண்டி, நள்ளிரவு வீட்டுக்கு ஓடாமல், தன் பத்து வயது பெண்ணுக்கு ஃபோன் செய்து, தனியாக இருக்கச் சொன்னார். பின்பு 5 மணி நேரம் அருகிலிருந்து உதவினார் மேரி மெரிடித் என்ற செவிலியார்!

சமயத்தில் காப்பவள் தானே அந்த சமயபுர நாயகி. படம் அழகு!

மஞ்சூர் ராசா said...

அருமையான முக்கியமான ஒரு நிகழ்வை மிக எளிய நடையில் பதித்திருக்கிறீர்கள்.

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது உண்மைதான்.

பாராட்டுக்கள்.

மஞ்சூர் ராசா said...

உங்களின் கட்டுரை முத்தமிழ் குழுமத்திலும் இடப்பட்டுள்ளது.
நன்றி.

http://groups.google.com/group/muththamiz

தி. ரா. ச.(T.R.C.) said...

உங்களுக்கு இந்த இக்கட்டான சமயத்தில் உதவியது யாரென்று நினைக்கிறீர்கள் அது மேரியம்மாவின் வடிவில் வந்த அந்த சமயபுரம் மாரியம்மாதான்.தெயவம் மனுஷ்ய ரூபேன என்று சொல்லியிருக்கிறது

துளசி கோபால் said...

மேரி அம்மா & மாரி அம்மா எல்லாம் ஒண்ணுதான் வல்லி. கடவுள் யாரோட
ரூபத்துலே வேணுன்னாலும் வரலாம், எனக்கு கதீஜா அம்மாவின் ரூபத்துலே
வந்த மாதிரி.

நீங்க சொல்றதுபோல ஒரு கஷ்டம் வந்துட்டாத்தான் குடும்பம்
நெருங்கி வந்துருது.

ஒவ்வொரு அனுபவமும் நமக்கு மனோதைரியத்தைக் கொஞ்சம் கொஞ்சமா
வளர்க்க உதவி செய்யுது இல்லே?

வல்லிசிம்ஹன் said...

அன்பு கண்ணபிரான்,
ஷ்ரவண் சௌக்கியமா?

கஷ்டங்கள் நம்மைப் பதப் படித்துவிடும்.
எனக்கு மத்திரம் அம்மன் வரவில்லை.அது பெரிய அருள் இல்லையா. மத்த நாலு பேரையும் பாத்துக்க என்னை விட்டு விட்டாள்.
அப்போது இன்ஃபெக்ஷனுக்கு பயந்து யாரும் வீட்டுக்கும் வரமாட்டார்கள். இந்த அம்மா மேரியும் அவர் பையன் லாரன்ஸும் தான் வந்தார்கள்.
நன்றி.உங்க குடும்பத்துக்கு வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

மன்சூர் ராஜா, வாங்க. நன்றி.
நான் பதிவு எழுதின போது வந்து
என்
தமிழைத் தொடக்கி வைத்தீர்கள்.

திருச்சியில் என்பதால் சுத்தி இருக்கும் ஊர் தெய்வங்கள் நம் சொந்தமாகிவிடும். எபோதும் கை விடாதவர்கள் அவர்கள் தானே.
முத்தமிழ் குழுமத்தில் இந்தப் பதிவு வருகிறது என்றால் பெருமை.உடனே பசங்களுக்கு சொல்லுகிறேன். நன்றி. ராசா.

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச,

தெய்வம் மனுஷ்ய ரூபேண.உண்மைதான்.

இந்த மேரியம்மா பாண்டி மதர் ஆசிரமத்தில் 'குசினி'யில் வேலை பார்த்ததாகச் சொல்லுவார்.

அவர்களை மறக்காமல் இருக்கத் தான் இந்தப் பதிவு.

நன்றி, தி.ரா.ச.

வல்லிசிம்ஹன் said...

sokkayi,
ஒருவேளை நம்ம அவரை மறந்தே போய் விடக்கூடாது
என்று தான் ,
இதெல்லாம் நடக்கிறது.

நன்றி, முதல்தடவையாய் வருகிறிர்கள்.

வல்லிசிம்ஹன் said...

துளசி, வாங்கப்பா.

ஆமாம் ரொம்பக் கோழைகளையும் இவைகள் பக்குவம் செய்துவிடும்.
அப்புறம் சூப்பர் வுமன் தான்.

கதீஜா பீவியே வந்தாரோ என்னவோ உங்களுக்கு.
குழந்தைகளும் இவரும் ஒன்றா உட்கார்ந்து,சாப்பிட்டு,படுத்து சேர்ந்து இருந்த

அந்த மூன்று வாரங்களும் எனக்கு
மறக்காது.

Mohan Madwachar said...

என் வலைப்பூவிற்கு வருகை தந்து மார்கழியில் ஒரு காலை படித்துவிட்டு தங்கள் மேலான கருத்தை மறுமொழி இட்டுச் சென்றமைக்கு மிக்க நன்றி. அன்புடன் மோகன்.

Mohan Madwachar said...

என் வலைப்பூவிற்கு வருகை தந்து மார்கழியில் ஒரு காலை ..படித்துவிட்டு தங்கள் மேலான கருத்துக்களை மறுமொழி இட்டுச் சென்றமைக்கு மிக்க நன்றி. அன்புடன் மோகன்.

அப்பாதுரை said...

ரசித்துப் படித்தேன். விறுவிறுப்பும் ஊடுருவி இருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையும் கொஞ்சம் அசர வைத்தது. "நம்பிக்கை வச்சா நடக்கும், அதெப்படி நடக்காம போகும்?" என்று என் அம்மா அடாவடி பண்ணுவார்.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மேரி மாரி என்று யாராவது ஏதோ ஒரு தருணத்திலாவது வருகிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது நிறைவாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வரணும்துரை.
இத்தனை பழைய பதிவை படித்தீர்களா!

மிகவும் நன்றி. எதோ அசட்டுத் தைரியம் உனக்கு ரொம்ப ஜாஸ்தி என்று என் அம்மா சொல்வார்கள். அசடோ, சமத்தோ, தைரியமும் நம்பிக்கையும் இல்லாவிட்டால் வாழ்வைத் தள்ளிக் கொண்டு போவது எப்படி:0)
மறக்க முடியாத சம்பவங்களில் இந்த 1974 டிசம்பரும் ஒன்று.